TamilsGuide

சஹாரா பாலைவனத்தில் நீரின்றி உயிரிழந்த 49 பேர் - துயரத்தில் உலகம் 

வடக்கு நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லொறி ஒன்று செயலிழந்ததால், பாதிப்படைந்த மக்கள், தாகம் காரணமாக குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மாலி நாட்டில் நடந்த ஒரு மத விழாவில் பங்கேற்றுவிட்டு அவர்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாக நைஜரின் அகாடெஸ் பிராந்திய ஆளுநர் அலுவலகம் வியாழக்கிழமை (04) இரவு இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

மாலி மற்றும் அல்ஜீரியா எல்லைகளுக்கு அருகிலுள்ள அசமகா (Assamaka) என்ற இடத்திற்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அந்த லொறி செயலிழந்து நின்றுள்ளது.

அங்கிருந்த இரண்டு ஆண்கள், ஒரு நீர்நிலையை நோக்கி 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்து சென்று உயிர் பிழைத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அசமகா பகுதிக்குத் தொடர்ந்து சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அகாடெஸ் பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இசா (Gen. Ibra Boulama Issa) என்பவரால் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு, அந்த லொறி நைஜர் எல்லையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலியின் தல்ஹான்டெக் (Talhandek) நகரத்திலிருந்து பல நாட்களாகப் பயணித்து வந்ததை அறிந்துகொண்டது. குறித்த லொறி செயழிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment