பாபி தியோல் நடிப்பில், அனுராக் காஷ்யப் இயக்கிய கிரைம் திரில்லர் திரைப்படமான ‘பந்தர்’, ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சனரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், படம் முதல் நாளில் இந்திய அளவில் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூலித்து மந்தமான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் 300-க்கும் குறைவான திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் பாபி தியோலுடன் சான்யா மல்கோத்ரா மற்றும் ஸ்ப்னா பப்பி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியான நேரத்தில், வருண் தவான் நடிப்பில் உருவான 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' மற்றும் ராம் சரண் நடித்த பெத்தி போன்ற பெரிய படங்களும் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 'பந்தர்' படத்திற்கான வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
படம் வசூலில் பின்தங்கியிருந்தாலும், பாபி தியோலின் திரைப்பயணத்திலேயே இது ஒரு மிகச்சிறந்த நடிப்பு என்றும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான அனுராக் காஷ்யப்பின் படங்களிலேயே இதுதான் மிகச்சிறந்த படைப்பு என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாபி தியோலின் சகோதரி ஈஷா தியோல், "நீங்கள் தற்போதைய மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறீர்கள், வாழ்த்துகள்" எனப் பாராட்டியுள்ளார். திரையரங்குகளில் படம் பார்த்தவர்களின் பாராட்டுக்கள் இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூலை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


