TamilsGuide

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி - இது பொருளாதார நெருக்கடி அல்ல

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது ஒரு பொருளாதார நெருக்கடி அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாகவே இலங்கை பொருளாதாரத்தில் மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என்றும், இது குறித்து எந்த வகையிலும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ,

“மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் சில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அந்த அதிர்வுகளுக்கு எடுக்க வேண்டிய தகுந்த கொள்கை ரீதியான தீர்மானங்களை நாங்கள் எடுத்து வருகிறோம். இதற்குள் எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் இல்லை. எவ்வாறாயினும், ஒரே நேரத்தில் இவ்வாறானதொரு அதிர்வு ஏற்படும் போதும், சந்தையில் ஒருவித ஊக வணிக நோக்கம் மற்றும் பயம் உருவாக்கப்படும் போதும், தேவையும் விநியோகமும் ஒரே கணத்தில் வழமை நிலைக்கு திரும்புவதில்லை. சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். டொலரின் மதிப்பு 350 ரூபாயைத் தாண்டிச் சென்ற வீதம், நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுடன் படிப்படியாக 330 ரூபாய் வரை குறைவடைந்தது.. மீண்டும் கடந்த இரண்டு நாட்களில் ஒரு சிறிய உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும். இதற்காக எந்த வகையிலும் பதற்றமடைய வேண்டாம். இது சந்தையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட விசேட சூழ்நிலையே தவிர, எந்த வகையிலும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியோ அல்லது வெளித்தரப்பின் சிக்கல் நிலையோ அல்ல.” என்றார்.
 

Leave a comment

Comment