TamilsGuide

பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுடனான சந்திப்பில் சங்கக்கார பங்கேற்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் பெற்ற பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார இணைந்து கொண்டார்

தேசிய மகளிர் அணி, இலங்கை ‘ஏ’ மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனைகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். இச்சந்திப்புக்குக் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தலைமை தாங்கினார்.

இதன்போது வீராங்கனைகளுடன் உரையாடிய குமார் சங்கக்கார மற்றும் முன்னாள் தேசிய வீரர்களான ரொஷான் மகாநாம, சிதத் வெத்திமுனி ஆகியோர், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்த வழிகாட்டல்களை வழங்கினர். அத்துடன் கூட்டுமுயற்சி ஒழுக்கம் மற்றும் அணியில் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை உணர்ந்து விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை மகளிர் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய சாதனையைக் பாராட்டிய எரான் விக்ரமரத்ன, இது “இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய தருணம்” என வர்ணித்தார்.

இனிவரும் காலங்களில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு இணையான கவனம், வாய்ப்புகள் மற்றும் ஆதரவு என்பன மகளிர் கிரிக்கெட்டுக்கும் வழங்கப்படுவதை தங்களது குழு உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேமி சிட்டன்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணிக்கு எரான் விக்ரமரத்ன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment