TamilsGuide

12 மில்லியன் கனடியர்களின் வங்கிக் கணக்குகளில் பண வைப்பு

கனடா வாழ் மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில், லிபரல் கட்சியின் மத்திய அரசு அறிவித்த மிக முக்கிய நிதியுதவித் தொகையானது தகுதியுடைய 12 மில்லியன் கனடியர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று முதல் வைப்பிலிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னியால் கடந்த ஜனவரி மாதம் முதன்முதலில் இந்த நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலன் திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று முதல் மக்களின் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஜிஎஸ்டி/எச்எஸ்டி வரித் திருப்பிளிப்பு' திட்டத்திற்குப் பதிலாகவே இந்த புதிய அத்தியாவசியப் பொருட்கள் பலன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்தத் தொகை ஆண்டுக்கு நான்கு முறை வழங்கப்பட்டு வந்தது.

சுமார் 12 மில்லியன் கனடியர்கள் இந்த ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு நிதியுதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்: குழந்தைகள் இல்லாத தனிநபர் அதிகபட்சமாக 267 டொலர் வரை பெறலாம்.

இரண்டு குழந்தைகள் உள்ள தம்பதியினர் அதிகபட்சமாக 533 டொலர் வரை பெறலாம். இன்று வழங்கப்படும் இந்த ஒருமுறைக்கான கூடுதல் கொடுப்பனவானது, ஆண்டுப் பலனில் 50 சதவீத மதிப்பாகும்.

மேலும், வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகையும் 25 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. 
 

Leave a comment

Comment