பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றான வர்ஷா கோஹிலின் சட்டப் போராட்டம், 23 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்ஷா கோஹில், 2002-ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது, 2,70,000 பவுண்டுகள் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக பெற்றார்.
ஆனால், தனது கணவர் உண்மையான சொத்து விவரங்களை மறைக்கிறார் என்ற சந்தேகம் வர்ஷா கோஹில்லுக்கு இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, பத்ரேஷ் கோஹில் நைஜீரிய முன்னாள் ஆளுநர் ஒருவருடன் இணைந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட குற்றவியல் விசாரணையில், அவர் மில்லியன் கணக்கிலான சொத்துக்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2011-இல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வர்ஷா கோஹில் தனது பழைய விவாகரத்து ஜீவனாம்ச வழக்கை மீண்டும் தொடங்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்தது.
அவரது சொத்துக்கள் அனைத்தும் குற்ற செயல்களின் மூலம் வந்தவை என்று அரசு தரப்பு வாதிட்ட போதிலும், திருமண வாழ்க்கையின் போது நேர்மையான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களும் அதில் இருப்பதாக வர்ஷா வாதிட்டார்.
தற்போது இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வில்லியம்ஸ், பத்ரேஷ் கோஹில் ஒரு ஏமாற்றுக்காரர் என்று சாடி, அவரது சொத்துக்களில் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்டசுமார் 85 கோடி ரூபாய் வர்ஷா கோஹிலுக்கு ஜீவனாம்சமாக வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இந் நிலையில் 23 ஆண்டு நீண்ட விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்துள்ளது


