அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் பாணியில் 'குறைந்த தீவிரத்துடன் சுடுவது' என்றொரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான அமைதி ஒப்பந்த பேச்சுக்காக கடந்த மாதம் முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
அதிகாரப்பூர்வ பேச்சுக்கான நடவடிக்கைகள் இரு தரப்பிலிருந்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சமீபத்தில் போர் நிறுத்தத்தை மீறி இரு தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டன.
இதை தற்காப்பு தாக்குதல் என பரஸ்பரம் இரு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து ட்ரம்ப் கூறியுள்ளதாவது: உலகின் பிற பகுதிகளில் இருக்கும் தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கான அர்த்தத்தைவிட, மேற்காசியாவில் இருக்கும் போர் நிறுத்த நடைமுறை முற்றிலும் மாறுபட்டது.
அங்கு முழுமையான போர் நிறுத்தம் என்பது உடனடியாக சாத்தியமில்லை. தாக்குதல்களின் தீவிரம் குறைவாக இருப்பதே அங்கு தற்காலிக போர் நிறுத்தமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


