அண்மைய டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்த கலந்துரையாடல் இன்று காலை (04) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த மே மாதம் 3 ஆம் திகதி அன்று ஒட்டோ டீசல் விலை 10 ரூபாவினாலும் மே 30 அன்று 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஒரு மாத காலத்திற்குள் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், தமது போக்குவரத்துத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினமான விடயமாக மாறியுள்ளதாகத் தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சூழ்நிலை குறித்து கடந்த 2 ஆம் திகதி பல பேருந்து சங்கங்கள் இணைந்து ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தன.
இதன்போது, அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு நிகராக 5% இடைக்காலப் பேருந்து கட்டண உயர்வை வழங்குமாறு அல்லது எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு வருகை தந்திருந்ததோடு, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


