TamilsGuide

கனடா பொலிஸார் குறித்து அதிருப்தி வெளியிடும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்

கனடாவின் பொலிஸாரது நடவடிக்கை குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள தனது இரு மடிக்கணினி மற்றும் மொபைல் பழுதுபார்க்கும் கடைகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களால், தமக்கு சுமார் 1,50,000 டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவின் வேனியர் மற்றும் பார்ஹேவன் ஆகிய பகுதிகளில் ‘கீக்ஸ் நோ திஸ்’ என்ற கடைகளை அவின் போர்வால் என்பவர் நடத்தி வருகிறார்.

இவரது கடைகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஐந்து முறை கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் வேனியர் பகுதியில் உள்ள இவரது கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

அவர்கள் கடையில் இருந்த ஸ்பீக்கர்கள், சவுண்ட் சிஸ்டம்கள், ஏர்பாட்ஸ் (AirPods), மானிட்டர்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றுவிட்டனர்.அலாரம் அடித்த போதிலும், வெறும் 5 நிமிடங்களுக்குள் கடையையே காலி செய்துவிட்டனர். நுழைவு வாயிலின் கண்ணாடிக் கதவுகளையும் உடைத்து நொறுக்கியுள்ளனர் என அவின் போர்வால் வேதனை தெரிவித்தார்.

வேனியர் கிளையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இரண்டு முறை கொள்ளையும், ஒரு முறை கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பார்ஹேவன் கிளையிலும் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள் குறித்துப் புகார் அளித்தும், ஒட்டாவா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரப் பல மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அவின் போர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

திங்கள்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, பொலிஸார் வருகை தர 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது அவர் கூறியுள்ளார்.

இதேவேளை,, பார்ஹேவன் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வேனியர் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், பிற அவசர அழைப்புகளின் தன்மையைப் பொறுத்தே போலீசாரின் வருகை நேரம் மாறுபடுவதாகவும் விளக்கமளித்துள்ளனர். 
 

Leave a comment

Comment