TamilsGuide

கனடாவில் மான் ஒன்றின் விசித்திர செயற்பாடு

கனடாவின் ஒன் சவுண்ட் (Owen Sound) நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் புகுந்த மான் ஒன்று, அங்கிருந்த இரு பெண்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார இறுதியில், ஒன் சவுண்ட் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் வேறொரு புகாரை விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த வாகன நிறுத்துமிடத்தில் மான் ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டுள்ளனர். அங்கிருந்த மக்களின் சத்தத்தைக் கேட்டு மிரட்சியடைந்த அந்த மான், திடீரென தரைத்தளத்தில் இருந்த ஒரு வீட்டின் படுக்கையறை ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்துள்ளது.

மான் உள்ளே புகுந்த அந்த அறையில் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவர் அந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக பொலிஸார் அந்த இரு பெண்களையும் பத்திரமாக வீட்டிற்குள் இருந்து வெளியேற்றினர்.

வீட்டின் பின்புறக் கதவை திறந்து வைத்து, மானை வெளியேற்ற போலீசார் முயன்றனர். "பலமுறை மானை கதவை நோக்கி வழிநடத்த முயன்றோம். பின்னர் சற்று சாதுரியமாக அதை நகர்த்திய போது, அது வந்த அதே ஜன்னல் வழியாகவே மீண்டும் வெளியே குதித்து தப்பியோடியது என ஒன் சவுண்ட் பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த பெண்ணின் கையில் லேசான கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்தப் படுக்கையறையும் கணிசமான அளவில் சேதமடைந்துள்ளது. அந்த மானுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment