TamilsGuide

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை

தற்போதுள்ள எரிபொருள் QR குறியீட்டு முறையை இனிவரும் காலங்களில் கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (01) தெரிவித்தார்.

இந்த நெருக்கடி காலத்தில் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்காக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,

உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வால், பெருமளவு அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது

நாடு 2026 ஜனவரியில் 186 மில்லியன் டொலரையும், 2026 பெப்ரவரியில் 97 மில்லியன் டொலரையும், 2026 மே மாதத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் 524 மில்லியன் டொலரையும் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிட்டுள்ளது.

இந்த நிலைமை இனிமேலும் நீடிக்காது.

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கும் டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வுகளைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

அதன் விளைவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து QR  முறையை இன்னும் கடுமையாகச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் தேவையை நிர்வகிப்பதன் மூலம், பொருளாதாரத்தை நிலைப்படுத்த இந்தக் கடுமையாக்கப்பட்ட நடவடிக்கைகள் உதவும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment