TamilsGuide

மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை- ஒருவர் கைது

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமம் மற்றும் திராய்மடு பகுதியில் நீண்டகாலமாகச் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல வியாபாரி ஒருவரை, 27.5 லீற்றர் கசிப்புடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (30) பகல் அதிரடியாக முற்றுகையிட்டுக் கைது செய்துள்ளனர்.

புனித பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, பொலிஸாரின் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

விசேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தலைமையக பொலிஸார் இணைந்து, திராய்மடு பகுதியில் அமைந்துள்ள குறித்த கசிப்பு வியாபாரியின் வீட்டை நேற்று பகல் 11.00 மணியளவில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது, வீட்டின் உள்ளே கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய பிரபல வியாபாரியைப் பொலிஸார் கையும் மெய்யுமாகக் கைது செய்தனர்.

மேலும், அங்கிருந்து விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 27.5 லீற்றர் கசிப்பு திரவத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக இப்பகுதியில் சட்டவிரோதமாகக் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் கிராமத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் பலமுறை முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர்.

எனினும், உள்ளூர் பொலிஸாரால் அவர் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேரடியாகக் களமிறங்கி இந்த முற்றுகையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கசிப்புத் தொகையையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment