விக்ராந்த்- ஐஸ்வர்யா ராஜேஷின் Under - 18 படம் பூஜையுடன் தொடக்கம்
சினிமா
மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் - 18” (Under - 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் கலந்துகொண்டு பேசிய நடிகை ராதிகா, "அண்டர் - 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, நடிகர்கள் ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்கிறார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில், "அண்டர் - 18 எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது." என்று தெரிவித்தார்.
நடிகர் நட்டி பேசுகையில், "ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர்" என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், :"நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் - 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்" என்றார்.






















