TamilsGuide

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்

உலகெங்கிலும் உள்ள பௌத்த பெருமக்களால் மிக உன்னதமாகக் கொண்டாடப்படும், பௌத்த தர்மத்தின் மிக முக்கிய ஆன்மிகத் திருநாளான புனித வெசாக் பௌர்ணமி தினம் (Vesak Full Moon Poya Day) இன்று சனிக்கிழமை (30) ஆகும்.

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் வாழும் பௌத்த மக்கள், மிகுந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த இப்புனித நாளைத் தங்களது வழிபாட்டுத் தலங்களில் பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

கௌதம புத்த பெருமானின் வாழ்க்கையோடு இணைந்த மிக முக்கிய மூன்று வரலாற்று நிகழ்வுகளை (முப்பெரும் நிகழ்வுகள்) நினைவுபடுத்தும் நாளாக இவ் வெசாக் தினம் அமைகிறது.

புத்தரின் பிறப்பு: சித்தார்த்த இளவரசராக கௌதம புத்தர் லும்பினி வனத்தில் அவதரித்தமை,
ஞானோதயம் பெறல்: அவர் தனது கடுமையான தியானத்தின் மூலம் கயாவில் ‘புத்தத்துவம்’ (ஞானோதயம்) அடைந்தமை, மகா பரிநிர்வாணம் (மறைவு); குசிநகர வனத்தில் புத்த பெருமான் இவ்வுலக வாழ்வை நீத்து பரிநிர்வாணமடைந்தமை.

இந்த மூன்று உன்னத நிகழ்வுகளும் வெவ்வேறு ஆண்டுகளில், இதேபோன்றதொரு வெசாக் பௌர்ணமி தினத்திலேயே இடம்பெற்றதாக பௌத்த மத வரலாறுகள் கூறுகின்றன.

இப்புனித நாளை முன்னிட்டு பௌத்த மக்கள் விசேட தான தர்மங்கள், சீல வழிபாடுகள் மற்றும் தியான நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத வழிபாடுகளுக்கு மேலதிகமாக, வீடுகள் மற்றும் பொது இடங்களில் அழகிய வெசாக் கூடுகள் (Vesak Lanterns), மின்விளக்குத் தோரணங்கள் மற்றும் அன்னதானப் பந்தல்கள் போன்ற கண்கவர் கலாசார அலங்காரங்களும் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment