ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.
அதன்படி , ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (28) வரையான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 ஆகும். அத்துடன் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ( 56,063 ) இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இரண்டாவதாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,582 சுற்றுலாப் பயணிகளும், மூன்றாவதாக சீனாவிலிருந்து 8,439 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதுடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், அந்த எண்ணிக்கை 245,981 ஆகும்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 பேரும், ரஷ்யாவிலிருந்து 75,963 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது, அந்த எண்ணிக்கை 277,327 ஆகும்.
ஜனவரி முதல் இதுவரையான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அவதானிக்கும் போது, பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக ஒரு சிறிய குறைவு ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


