TamilsGuide

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை புற்றுநோய் விசேட வைத்தியர் ஒருவரைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியர், அர்ச்சுனா தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் திட்டமிட்டுச் செய்திகளையும் பரப்புரைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், ஒரு தனியார் ஊடகம் மற்றும் சில யூடியூப் (YouTube) தளங்கள் உள்ளிட்ட தரப்பினரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு நியாயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகள் தரப்பிலான சட்டக் கருத்துக்கள் மற்றும் சமர்ப்பணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான், இந்த வழக்கின் தீர்க்கமான இடைக்காலக் கட்டளையை பிறப்பிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
 

Leave a comment

Comment