TamilsGuide

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பருத்தித்துறை முனை கடற்கரைக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்தும் காங்கேசன்துறை கடற்படை கட்டளை அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்திய கடலோர காவற்படை மற்றும் இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு உதவி கோரினார்.

இதேவேளை, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவுடனும் தொடர்புகொண்டு ஹெலிகொப்டர் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சுமந்திரன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
 

Leave a comment

Comment