TamilsGuide

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது- தையிட்டியில் பரபரப்பு

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ‘திஸ்ஸ விகாரை’ வளாகத்தைப் புகைப்படம் எடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு வருகை தந்திருந்த குறித்த இரு இளைஞர்களும், தங்களது கைபேசிகளைப் பயன்படுத்தி விகாரை வளாகத்தைப் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இளைஞர்களை இடைமறித்து அவர்களது கைபேசிகளைப் பறிமுதல் செய்து சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன், அந்த இளைஞர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் தங்களது கைபேசிகளில் எடுத்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், இரு இளைஞர்களையும் விகாரை வளாகத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பொலிஸார், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அங்கிருந்து பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இராணுவத்தினரால் தையிட்டியில் அமைக்கப்பட்ட இந்த விகாரை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் சிவில் சமூகப் போராட்டங்கள் நிலவி வரும் நிலையில், இக்கைது நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment