TamilsGuide

மாற்றம் வேண்டும் என நினைத்ததால் மக்கள் வாக்களித்துள்ளனர் - சத்யராஜ் முன்னிலையில் விஜய்யை பாராட்டி பேசிய நடிகர் சிவகுமார்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தொடர்ந்து 2 பேரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சிவகுமார் கூறியதாவது:-

வீட்டில் அனைவரும் கைப்பேசியுடன் தனியாக அமர்ந்து கொண்டுள்ளோம். கைப்பேசியை தூக்கி எறிந்து விட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். தனியாக இருக்கக் கூடாது. நெருங்கிய நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். மனம் விட்டு நண்பர்களிடம் பேசுங்கள். 85 வயதான நான் இப்போதும் தினமும் 20 நண்பர்களிடம் பேசுகிறேன்.

உடலை சரியாக வைத்தால் மருத்துவர்கள் தேவையில்லை. நடைப்பயிற்சி சென்றால் உடல் வலிமையாகும். இரண்டாவது இதயம், கால் தான். 40 வயதுக்கு மேல் இறைச்சி உணவுகளை சாப்பிடக்கூடாது.

காமராஜர் போல எளிமையான முதல்வரை பார்க்க முடியாது. ஆனால் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்ததால் அவரை புறக்கணித்து மக்கள் தி.மு.க.வை தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு 60 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க., அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சி அமைத்து வந்தன. இப்போது மக்கள் மீண்டும் மாற்றம் வேண்டும் என நினைத்துள்ளனர். அதனால்தான் மக்கள் ஜோசப் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.

இளைய தலைமுறை, முதல் வாக்காளர்கள், பெண்கள் பெரும்பாலும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். வாக்களித்த மக்கள் தான் நீதிபதிகள். அவர்களது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜோசப் விஜய் நல்லது செய்வார் என நம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில் சிவகுமார் பேசுகையில், எங்கள் கிராமத்தில் முதன்முதலில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன் நான் தான். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜய் ஆகிய 4 முதல்-மந்திரிகளுடன் நடித்துள்ளேன் என்றார்.

விஜய்யை பாராட்டி சிவகுமார் பேச, பேச அருகில் இருந்த சத்யராஜ் ஒருவித நெருடலுடன் அமர்ந்திருந்தார். காரணம் சத்யராஜ் தீவிர தி.மு.க. ஆதரவாளர் ஆவார். இருந்தாலும் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் வீடியோ பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதேசமயம் தி.மு.க.வுக்கு தன்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் எனவும் கூறி இருந்தார்.

சத்யராஜ் இந்த அளவுக்கு தி.மு.க. ஆதரவாளராக இருக்கும்போது, மூத்த நடிகர் சிவகுமார் த.வெ.க. ஆட்சியை வரவேற்றும், பாராட்டியும் பேசியபோது சத்யராஜ் அதை அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் தன்னுடைய கருத்தை சொன்னாலும், அதற்கு மறுப்பும், எதிர்ப்பும் காட்டாமல், சத்யராஜ் நாகரீகத்துடன் அமைதியாக அமர்ந்து கவனித்ததை, சுற்றியிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை மேற்கொண்ட விஜய்க்கு நடிகர் சத்யராஜூம் பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் கூறுகையில், உடல் ஆரோக்கியத்துக்கு மன வலிமை, உடல் வலிமை இரண்டும் இரு கண்கள். போதைப் பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் சுதாரித்துக் கொண்டு திருந்திக் கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ் நிலையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டக்கூடியது என்றார். 
 

Leave a comment

Comment