ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்
இலங்கை
ஐக்கிய அரபு எமீரகத்தின் அபுதாபியில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்தக் குழுவினர் நேற்று இரவு (27) கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்தனர் என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் சூழல்களில் நடந்த ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை வைத்திருந்ததாகவும், அத்துடன் சமூக ஊடகங்களில் அத்தகைய உள்ளடக்கங்களில் கருத்துகள் மற்றும் எதிர்வினைகள் மூலம் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், அவர்கள் அபுதாபி பாதுகாப்பு முகமைகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் அம்பலாங்கொடை, மாரப்பனை, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வுத் துறை (CID), அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) ஆகியவற்றின் அதிகாரிகள் சந்தேக நபர்களிடம் விரிவான விசாரணையை ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.























