இலங்கை மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனப் போக்கைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்ச்சியான அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி உடனடியாகச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் நாட்டின் நிஜமான பொருளாதாரத் தரவுகளை முன்வைத்து இவ்வாறான எச்சரிக்கையை விடுத்தார்.
அப்பட்டமான பொய்
நாட்டில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனக் காட்டுவதற்காக ஜனாதிபதி நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போதிய டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் சஜித் பிரேமதாச சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு கூறும் 7 பில்லியன் டொலர் கையிருப்பில், பயன்படுத்த முடியாத சீன யுவான் நாணயம் காணப்படுவதால், உண்மையான கையிருப்பு அதைவிடக் குறைவாகவே உள்ளது. சர்வதேசப் பொருளாதாரக் கொள்கைகளின்படி, ஒரு நாட்டின் கையிருப்பு குறைந்தபட்சம் 3 மாத இறக்குமதிச் செலவை ஈடுகட்ட வேண்டும்.
இலங்கையின் மாதாந்த இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலராக உள்ள நிலையில், தற்போதைய இருப்பைக் கொண்டு 3 மாத இறக்குமதியைக்கூடச் சமாளிக்க முடியாது.
இந்த யதார்த்தத்தை மறைத்து அரசு மக்களை ஏமாற்றுகின்றது. தற்போது நாட்டுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பீடுகள் 8 பில்லியன் டொலராக அதிகரித்திருந்தாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் போர்ச் சூழல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அங்கு பொருளாதாரம் சரிந்தால் எமது தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள். இது குறித்து அரசு இன்னும் வாய் திறக்கவில்லை.
மேலும், கடந்த 2022 கொரோனா காலப்பகுதியில் இலங்கைக்குப் பெருமளவில் உதவிய இந்தியா போன்ற அண்டை நாடுகளும் தற்போது தத்தமது உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், முந்தையது போன்ற உதவிகளைப் பெறுவது எளிதல்ல.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2022 இல் நாடு வங்குரோத்தடைந்த சமயத்தில் 470 ரூபாவா க இருந்த 92 ரக பெற்றோல், தற்போது 410 ரூபாவாக மட்டுமே குறைந்துள்ளது. இதன் மூலம் யதார்த்த நிலைமையை விளங்கிக்கொள்ளலாம்.
தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. இதனால் நாட்டின் கடன் தரவரிசைகள் மீண்டும் பாதிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து 2028 ஆம் ஆண்டாகும்போது, மாதாந்த இறக்குமதிச் செலவுகளுக்கு மேலதிகமாக, ஆண்டுதோறும் திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 2.5 பில்லியன் டொலரிலிருந்து 3.5 பில்லியன் டொலர் வரை பாரியளவில் அதிகரிக்கும்.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். எனவேதான், 'தொடர்ச்சியான அடுத்தடுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு' அரசு செல்ல வேண்டும் என நான் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தினேன்.
அண்மையில் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயல் அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுமாறு நான் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்திருந்தது..
அனர்த்த வேளையில் சர்வதேச மாநாட்டைக் கூட்டுமாறு நான் கோரியபோது, இந்தத் தலைக்கனம் பிடித்த அரசு 'பிளீஸ் வேண்டாம்' என்று கூறி அந்தப் பாரிய வாய்ப்பைக் குழிதோண்டிப் புதைத்தது.
இப்போதாவது அந்த வெட்கக்கேடான அரசியலை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக இல்லாமல், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின்படி மக்கள் நலன் சார்ந்த அடுத்த கட்ட சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்ட அரசு முன்வர வேண்டும்.
பொய்யான மாய பிம்பங்களை விடுத்து, சவால்களை எதிர்கொள்ளத் தேவையான டொலர்களை நாட்டுக்குக் கொண்டுவரும் முறையான திட்டங்களை நோக்கி அரசு உடனடியாக நகர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


