கனேடிய நகரமொன்றில் குழந்தையின் உயிரற்ற உடல் கண்டுபிடிப்பு - அதிர்ச்சிப் பின்னணி
கனடா
வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பொன்று வந்துள்ளது.
மருத்துவ உதவிக்குழுவினர் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு 23 வயதுடைய பெண்ணொருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கவே, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவர் குழந்தை பெற்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவரவே, அவரது குழந்தை அவருடன் இல்லாததால் குழந்தை எங்கே என மருத்துவ உதவிக்குழுவினர் தேடியுள்ளனர்.
பொலிசாரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து குழந்தையைத் தேடிவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணியளவில், ஹாலிஃபாக்ஸுக்கு வெளியே, மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் குழந்தையின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை எப்படி உயிரிழந்தது என்பதை அறிவதற்காக குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதைத் தொடர்ந்து, குழந்தையின் தாயான அந்தப் பெண்ணின் உறவினர்களான நான்கு பேரை பொலிசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
பின்னர், அந்தப் பெண்ணின் உறவினர்களான சுக்பிரீத் சிங் (23), மற்றும் அவரது மனைவியான ரமன்தீப் கௌர் (26) ஆகிய இருவர் மீதும் குழந்தையின் உடலை மறைத்தது முதலான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இன்று ஹாலிஃபாக்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.






















