• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்

இலங்கை

வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்த சீலனை விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் நியமித்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த உத்தியோகத்தர் 33 வெற்றுக் காசோலைகளில் மோசடியாக ஒப்பமிட்டமையானது NP/11/MN/ACLG/2023/01 இலக்க 2024.01.02 ஆம் திகதி கணக்காய்வு அவதானிப்புக்கள் – 2023 என்ற தலைப்பிடப்பட்ட மாகாண உள்ளக கணக்காய்வாளரது அறிக்கையின் பந்தி இல 3.1 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

பந்தி இல 3.2, 3.3, 3.4 மற்றும் 3.5 ஆகியவற்றிலும் காசோலை முறைகேடுகளை வெளிக்கொணர்ந்து உள்ளது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

குறித்த கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி அலுவலர் தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஆரம்ப புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் தலைவராக வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சுரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் ச.ராதிகா மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக பொறியியல் சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் ரி.அருங்கலைச் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அண்மையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்ற போது மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவில் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply