TamilsGuide

அமெரிக்காவை உலுக்கும் பணவீக்கம் - தவிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதன் காரணமாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். எண்ணெய் விநியோகத்தில் அமெரிக்கா பெருமளவுக்கு தற்சார்புடையது என்ற ட்ரம்பின் வாதம் சரியானதாக இருந்தாலும், அது உலகளாவிய சந்தையில் எண்ணெய்யின் விலையில் ஏற்படும் தாக்கத்தைத் தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை.

பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும், வீடுகளை வெப்பப்படுத்துவதற்கும் அதிக தொகையை செலவிடுவதால், அவர்களால் ஏனைய தேவைகளுக்கான செலவினங்களை மேற்கொள்ள முடிவதில்லை.

இது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதுடன், பணவீக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. அதேநேரம், இந்த நிலைமை அரசியல் ரீதியிலான பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் தத்தமது பிராந்தியங்களுக்குச் செல்லும் போதெல்லாம், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் கடுமையான விசனங்களுக்கும் கேள்விகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாக அளித்த வாக்குறுதிக்காகவே டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை என்றே தற்போது பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

எனவே, அவர் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புகிறார். தமக்கு எந்த அவசரமும் இல்லை என்று அவர் கூறினாலும், இதனை விரைவாகச் செய்து முடிக்கவே அவர் விரும்புகிறார்.

ஏனெனில், இந்த விவகாரம் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவுக்கு அது பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
 

Leave a comment

Comment