தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ‘சேயோன்’ திரைப்படத்தை தொடர்ந்து புதிய படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கமிட் ஆகி உள்ளார். ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இனிவரும் காலங்களில் இப்படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிவகார்த்தியேன் நடித்த ‘பராசக்தி’ படம் வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


