இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமும் சந்தையை நிலைப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஒரு பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், அண்மைய நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நிராகரித்தார்.
அத்துடன், டொலர் ஒன்றின் பெறுமதி 340 ரூபாவை விஞ்சும் போது சிலர் அதனை கொண்டாடுவதாகவும் கூறினார்.
டொலரின் பெறுமதி ஏற்கனவே மீண்டும் சரியத் தொடங்கி, சுமார் 334 ரூபாவாகக் குறைந்துள்ளது, வரும் வாரங்களில் அதன் பெறுமதி மேலும் குறையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தத் தொகை கிடைத்தவுடன் நாட்டின் அந்நியச் செலாவணி நிலை மேலும் வலுப்பெறும்.
நாணய பெறுமதி நிலவரம் குறித்து பீதியை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
எவ்வாறெனினும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் வெற்றிகரமாகத் தொடர்வதாகவும் அவர் மேலும் இதன்போது வலியுறுத்தினார்.


