TamilsGuide

கேன்ஸ் விழாவில் மகளுடன் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்

2026-ம் ஆண்டிற்கான 79-வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. விழாவில் உலகமெங்கும் உள்ள பிரபல ஸ்டார்கள் பலர் கேன்ஸ் விழாவில் பங்கேற்று சிறப்பு சேர்த்து வருகின்றனர்.

இந்திய திரை உலக பிரபலங்கள் ஆலியாபட், அதிதிராவ் ஹைதரி, ஊர்வசி ரவுதேலா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பலர் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் தேவதைகளாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

எத்தனை பேர் விழாவுக்கு வந்தாலும் பார்வையாளர்களின் கண்கள், இந்திய பிரபலம் ஒருவரை நோக்கியே காத்துக் கொண்டிருந்தன. அவர் வேறு யாருமல்ல நம்ம... ஐஸ்வர்யா ராய் தான். இந்த ஆண்டு அவர் வருவாரா? வரமாட்டாரா? என இணையதள பக்கங்களில் பெரிய வாதமே நடந்து கொண்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கேன்ஸ் விழாவில் பங்கேற்று அனைவரையும் தனது அழகாலும், கவிதை பாடும் தன் கண் அசைவினாலும் கவர்ந்து வந்தார். அவரைக் காணாமல் ஏமாற்றத்துடன் காத்திருந்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நேற்று பூர்த்தி செய்தார் ஐஸ்வர்யாராய்.

விழாவில் நீல நிற மாடர்ன் கவுன், ஸ்டைலிஷான சிகை அலங்காரம், தனித்துவமான அணிகலனை அணிந்து கொண்டு ‘அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்’ என சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக பறக்கும் முத்தங்களை பறக்க விட்டபடி நடந்து வந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார் ஐஸ்வர்யா ராய்.

இதன்பின் சில மணி நேரங்களுக்கு பிறகு பிங்க் நிற ஆடையுடன் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். அவர் சிவப்பு நிற உடை அணிந்து தாயுடன் இணைந்து நடந்து வந்தார்.

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
 

Leave a comment

Comment