• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு

இலங்கை

கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தில் இதுபோன்ற மோசடிகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத காணி நிரப்பல்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இனிவரும் காலங்களில் அதற்கு இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பாக உடனடியாகக் கவனம் செலுத்தி, அவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறும் அறிவுறுத்தினார்.

திருக்கோவில் நெல் களஞ்சியசாலை நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் அட்டாளைச்சேனை கழிவு மீள் சுழற்சி நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் தேசிய நீர் வழங்கல் சபையினால் லாகுகல பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக ஹெடஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டு, வர்த்தக ரீதியான பெறுமதியைக் கொண்ட திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள காணிகளை மீண்டும் கையகப்படுத்தி அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அவ்வாறான காணிகளை மகாவலி அதிகார சபையிடமிருந்து பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரின் கீழ் கொண்டுவந்து, முறையான திட்டத்தின்கீழ் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 22,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீதிகள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் வீட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டுக்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.
 

Leave a Reply