2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி
இலங்கை
2022 ஆம் ஆண்டைப் போல நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அத்தகையதொரு சூழ்நிலை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது என்றும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனை கையாள்வதற்கான ஆளுமை அரசாங்கத்திடம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, இனவாதத்திற்கு இடமளிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது, அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பது ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.






















