TamilsGuide

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாக்களித்த கனடா பிரஜை

அமெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வரும் கனடா நாட்டு பிரஜை ஒருவர், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட மத்திய அரசு தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்ட மா அதிபர் அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. சன்னி மேன்ஹெர்ட்ஸ் என்ற 40 வயதுடைய அந்த நபர் மீது, வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் போலியானது என்று தெரிந்தே வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த நபர் 1987 பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் நிரந்தர குடியிருப்பாளராக மாறியுள்ளார்.

இவர் பாஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள சாகஸ் என்னும் பகுதியில் வசித்து வந்தார். அமெரிக்காவில் வாக்குப்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ பதிவுப் படிவங்களில், தான் ஒரு "அமெரிக்கக் குடிமகன்" என்று இவர் தவறான தகவலைக் குறிப்பிட்டுப் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கக் குடியுரிமை இல்லாத நிலையிலும், அவர் பல தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்காளர் பதிவின் போது தான் ஒரு அமெரிக்கக் குடிமகன் எனக் குறிப்பிட்ட இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நிரந்தர குடியுரிமை அட்டையை மாற்றுவதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் விண்ணப்பித்த போது, தான் ஒரு "நிரந்தர குடியிருப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டு படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த முரண்பாடான ஆவணங்கள் மூலம் அவர் சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதுடன் 1,00,000 டாலர் முதல் 2,500,00 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment