650 பெண்களை இரகசிமாக படம் பிடித்த நபருக்கு தண்டனை
கனடா வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிகளவிலான பெண்களை ரகசியமாகப் படம் பிடித்த வழக்கில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சானிச் (Saanich) பகுதியைச் சேர்ந்த 39 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
விக்டோரியா பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
யின் யெங் டெரெக் சான் என்ற இந்த நபர், 2017 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
சானிச் காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
கடந்த 2024 ஜனவரி 16 அன்று, பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் சானிச் பகுதியிலிருந்து பதிவேற்றப்பட்ட ஆபாச மற்றும் ரகசியப் புகைப்படங்களை விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்டறிந்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கியது.
விசாரணையில், டெரெக் சான் ஏற்கனவே உடை மாற்றம் அறை ஒன்றில் பெண்ணைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து பிடிபட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஏப்ரல் 11, 2024 அன்று அவரது வீட்டில் வைத்து சான் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் ஆயிரக்கணக்கான புகைப்படங்களும், 28 மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோக்களும் இருப்பது கண்டறியப்பட்டது.
கடற்கரைகள், வணிக வளாகங்கள் மற்றும் சில சமயங்களில் வீடுகளின் ஜன்னல்கள் வழியாகவும், பெண்களின் அனுமதியின்றி இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில சர்வதேச இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் சோதனையின் மூலம் இந்த வீடியோக்களில் மொத்தம் 652 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் பொலிஸார் பேசியுள்ளனர்.
டெரெக் சான் நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறியது, ஆபாசப் படங்களை வெளியிட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 2025 அக்டோபரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வியாழக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இவருக்கு நான்கரை ஆண்டுகள் (4.5 Years) சிறைத்தண்டனை விதித்து விக்டோரியா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே அவர் காவலில் இருந்த காலத்தைக் கழித்து, இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இவரது டி.என்.ஏ மாதிரியைத் தேசிய பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






















