TamilsGuide

ஆன்மிக பயணத்தில் ரவிமோகன்- மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்... 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே, ரவிமோகனின் வாழ்க்கையில் பின்னணி பாடகி கெனிஷா முக்கிய நபராக மாறினார். ரவிமோகன், ஆர்த்தி பிரச்சனைக்கு காரணம் கெனிஷாதான் என்று சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த விவகாரத்தில் விமர்சிப்போருக்கு அவ்வப்போது கெனிஷாவும் பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், ஆர்த்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்தெரிவிக்கக்கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்து, பின்னர் ரவிமோகனிடமிருந்தும், சென்னையில் இருந்தும் விலகிச்செல்கிறேன் என்று கடந்த 14-ந்தேதி இரவு கெனிஷா அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி நடிகர் ரவிமோகன், சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள தனது ஸ்டுடியோவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்கமுடியாது. என்னை பற்றிய விமர்சனங்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இனி என்னை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனிமேல் நடிக்கப் போவது கிடையாது. என் படங்கள் திரைக்கு வராது. ஏனெனில் என்னால் நிம்மதியாக நடிக்க முடியவில்லை. என்னிடமும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விரைவில், அவை ஒவ்வொன்றாக வெளிவரும். என் பிள்ளைகளை பார்க்கக்கூட என்னை விடமாட்டேன் என்கிறார்கள் என்று கண்ணீர் மல்க ஆர்த்தி குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் ரவி மோகனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் தற்போது ஆன்மிக பயணத்தில் ஈடுபட்டுள்ளார். சபரிமலை கோவில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை நடிகர் ரவி மோகன் தொடங்கியுள்ளார். இதனால் ரவிமோகன் சொன்னது போல் நடிப்பில் இருந்து விலகி ஆன்மிகத்தில் நுழைந்துள்ளதாக இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


 

Leave a comment

Comment