TamilsGuide

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சோதனை நடத்தி, சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திட்டிய வீதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஒலிபரப்பு மையம் ஒன்று இயங்கி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்திடம் இருந்து பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (19) அந்த வளாகத்தில் சோதனையை முன்னெடுத்தனர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகளும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபரப்பு உபகரணங்களுடன் சட்டவிரோத தொலைக்காட்சி ஒலிபரப்பு மையம் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.

இதன்போது, ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டு கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர், களுபோவில பகுதியில் வசிக்கும் 55 வயது மாலத்தீவு நாட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.

இந்த நடவடிக்கையில் சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், கல்கிஸை பொலிஸ் அதிகாரிகளும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment