• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை

இலங்கை

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste Management) நடவடிக்கைகளை மிகவும் சீரான முறையில் முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைவாக, வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் அனைத்து அரசு நிறுவனங்களுக்குள்ளும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் (Single-use) பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதோ அல்லது பயன்படுத்துவதோ முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அரசு நிறுவனங்களுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசப்படும் ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கும் அனைத்து நிறுவனத் தலைவர்களும் தத்தமது மட்டங்களில் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, கடந்த வருடத்தின் (2025) ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையில் உள்ள விதிகளும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரசு நிறுவனங்களும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “3R” (Three R) கருத்தாக்கத்திற்கு இணங்கவே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதாவது: Reduce: கழிவுகளைக் குறைத்தல்,, Reuse: மீண்டும் பயன்படுத்துதல், Recycle: மறுசுழற்சி செய்தல் என்பனவாகும் .

இந்த முக்கிய சுற்றறிக்கையானது சுற்றாடல் அமைச்சின் முழுமையான உடன்பாட்டுடனும், வழிகாட்டலுடனும் வௌியிடப்பட்டுள்ளதாகப் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பசுமை நிர்வாகத்தை நோக்கி அரச கட்டமைப்பு நகர்வதற்கு இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply