'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் "ஹபீபி" என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஹபீபி படக்குழுவுடன், திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஹபீபி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்தார். இது குறித்து பேசிய அவர், "திரைத்துறைதான் இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சினிமா துறை ஜாம்பவான்களை மக்கள் தங்களின் தலைவர்களாக உள்வாங்கியுள்ளனர்.
கேரியரின் உச்சத்தில் இருந்து சி.எம். ஆகியுள்ள அவர், காலை 9:30 மணி முதல் மாலை வரை ஒரு அரசு ஊழியரைப் போல அர்ப்பணிப்புடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அளிக்கிறது.
சினிமாவில் சிறுபான்மையினர் யார் என்று பார்த்தால், அது இந்த சின்ன மற்றும் நல்ல படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமலும், ரிலீஸ் செய்ய முடியாமலும் போராடும் இத்தகைய நல்ல படங்களுக்குபுதிய அரசு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.


