வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படும் போது அதனை அமைத்து யாழ் மாநகர சபைக்கு வழங்கப்படும் என்ற உறுதி மொழியின் பிரகாரம் அமைக்கப்பட்டமை யாவரும் அறிந்தது.
பின்னர் யாழ் மாநகர சபை அதன் பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்திய தூதரகம் தலையீடு செய்து சில காலங்களுக்கு அதனை பராமரித்து தருவதாக வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த அரசாங்கம் ஒன்றில் குறித்த கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவுகளை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்கும் அதனை தமது கண்காணிப்பின் கீழ் வழங்குமாறு கோரியது.
அதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இந்திய தூதரகத்திற்கு விடுத்த அழுத்தத்தின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என அடையாளமாக கட்டப்பட்ட திருவள்ளூர் கலாச்சார மண்டபத்தினை புத்த சாசன அமைச்சையும் நம்பிக்கை பொறுப்பு சபைக்குள் உள்வாங்கியமை குறித்து பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் கலாச்சார ரீதியான மற்றும் மத அடையாளங்களை அழிப்பதற்கும் திரிவு படுத்துவதற்கும் பிரதான காரணமாக விளங்குகின்ற புத்தசாசன அமைச்சை திருவள்ளுவர் கலாச்சார மண்டப நம்பிக்கை பொறுப்புச் சபைக்குள் உள்வாங்கியமை திட்டமிட்ட தமிழின அழிப்பாகும்.
புத்த சாசன அமைச்சின் கீழ் வருகின்ற தொல்பொருள் திணைக்களம் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட முறையில் பௌத்த மத ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.
உதாரணமாக கூறின் இராணுவத்தின் துணையுடன் தையிட்டியில் தனியார் காணிக்குள் திட்டமிட்டு பௌத்த மத கட்டுமானத்தை அமைத்தது மட்டுமல்லாமல் இன்று வரை அதனை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளை புத்தசாசன அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கோ பௌத்த சமயத்துக்கோ எதிரானவர்கள் அல்ல ஆனால் திட்டமிட்ட சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல்களை மட்டும் எதிர்ப்பவர்கள்.
சிங்கள மக்கள் வடக்கில் வசிக்க தகுதியற்றவர்கள் என நாங்கள் கூற வரவில்லை தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குடியாறுவதையே நாங்கள் எதிர்க்கிறோம்.
எமது நியாயமான கோரிக்கைகளை விளங்கிக் கொள்ளாத சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களையும் தமிழ் இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
இன்று நேற்று அல்ல இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை தட்டிக் கேட்பவர்களை இனவாதிகள் என முத்திரை குத்துவதே வரலாறு
தமிழ் மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் தெற்கில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும் அவர்களின் ஆட்சியில் பௌத்த சிங்கள கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
ஜேவிபியாக தமிழின அழிப்பில் பங்கெடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான முறையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஆகவே யாழ்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்க்கப்பட்டமை தமிழ் மக்களுக்கென தனியான கலாச்சார அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சிந்தனையே காரணம் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்


