TamilsGuide

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு - இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் வாக்களித்தமை சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து வெளிநாடுகளுக்குத் திரும்ப சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களது கைவிரலில் தேர்தல் மை இருப்பதைக் கண்டு அதிகாரிகள் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒருவர், 2022-ல் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார்.

திருமண நிகழ்விற்காக சென்னை வந்திருந்த அவர், தி.நகர் தொகுதியில் வாக்களித்துள்ளார்.

இதையடுத்து கே.கே.நகர் பொலிஸார் அவரைக் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற ஒருவர், விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்துவிட்டுத் திரும்பும்போது சிக்கினார்.

அவர் மீது விருகம்பாக்கம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது.

இவர் மீது கொடுங்கையூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவுடன் இந்தியக் குடியுரிமை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தானாகவே ரத்தாகிவிடும்.

இருப்பினும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இவர்களது பெயர்கள் நீக்கப்படாததால், பழைய அடையாள அட்டையை வைத்து இவர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரியவருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒவ்வொரு வாக்கும் வெற்றியின் முடிவைத் தீர்மானிக்கும் நிலையில், வெளிநாட்டுப் பிரஜைகள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment