TamilsGuide

ஓமானில் சிக்கியது 6.6 மில்லியன் டொலர் - இலங்கையில் திருடப்பட்ட பணமா? சர்வதேச அளவில் விசாரணை தீவிரம்!

ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கருதப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது இலங்கையில் திருடப்பட்ட பணமா என்பது குறித்து தற்போது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஆசிய நாடு ஒன்றின் வங்கி அமைப்புகளை ஊடுருவி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஓமான் அரச பொலிஸார் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமானில் உள்ள ஒரு வங்கிக் கிளையின் ஊடாக, இந்த மிகப்பெரிய தொகையை ஓமான் நாட்டு நாணயத்திற்கு (Omani Rial) மாற்ற சைபர் குற்றவாளிகள் முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அந்தப் பணம் கைப்பற்றப்பட்டது.

சைபர் குற்றவாளிகள் எந்த நாட்டிலிருந்து இந்தப் பணத்தைத் திருடினார்கள் என்பதை ஓமான் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், இந்தப் பணம் இலங்கைக்குச் சொந்தமானதாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கான காரணங்கள் , அண்மையில் இலங்கையின் திறைசேரியிலிருந்து (Treasury) 2.5 மில்லியன் டொலர்களும், தபால் திணைக்களத்திலிருந்து 625,000 டொலர்களும் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மைக்காலத்தில் இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் இவ்வளவு பாரிய அளவிலான நிதி காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

இதனால், ஓமானில் மீட்கப்பட்ட பணத்திற்கும் இலங்கையில் காணாமல் போன பணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இலங்கை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் பணம் இலங்கைக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அது நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும்.
 

Leave a comment

Comment