பெங்களூருவில் ஒரு ஆசிரம நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஒரு முறை ரவிசங்கர் குருஜியின் அழைப்பை ஏற்று இந்த ஆசிரமத்துக்கு வந்தேன். 2 நாட்கள் தங்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்தேன்.
ஆனால் இங்குள்ள இயற்கை சூழலை கண்டு வியந்து போனேன். அதனால் 15 நாட்கள் தங்கினேன். ஆசிரமத்தின் பசுமை, ஏரி, மக்களின் சிரித்த முகம் என்னை வெகுவாக கவர்ந்தது. இங்கு என்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.
என்னை ஆசிரமத்துக்கு அழைத்தபோது, நான் சிறிது பயப்பட்டேன். நான் ஆசிரமத்துக்கு வந்தால் என்னை மக்கள் சூழ்ந்து கொண்டு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்து தயங்கினேன்.
அங்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்கள் இருந்தனர். ஆனால் ஒருவரும் என்னை கண் திறந்து பார்க்கவில்லை. என்னை அடையாளம் காணவில்லை. நான் மக்களை பார்த்து கைகூப்பி வணங்கினாலும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த அனுபவம் எனது ஆணவத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது. ஆன்மிக சக்தி முன்பு சினிமா புகழ் என்பது ஒன்றுமில்லை என்று நான் புரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


