TamilsGuide

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் ஆரம்பமாகிறது.

இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பிரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்க தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிரைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment