உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுமார் 2,000 கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
இவர்களை மீட்க அமெரிக்கா ஆரம்பித்துள்ள 'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்கக் கொடி ஏந்திய 'Alliance Fairfax' என்ற சரக்குக் கப்பல், அமெரிக்க இராணுவப் பாதுகாப்போடு நீரிணையை கடந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.
ஈரானின் 7 அதிவேகப் படகுகளை நாங்கள் அழித்துவிட்டோம். மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த மீட்பு நடவடிக்கைக்கு யாராவது தடையோ அல்லது இடையூறோ விளைவித்தால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும்," என ட்ரம்ப், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், ஈரானின் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமீரகத்தின் மீது 12 பொலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பல் ஒன்றிலும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் தாக்குதல் குறித்த தகவல்களை ஈரான் மறுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவிக்கையில்,
"அரசியல் நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு கிடையாது. அமெரிக்காவின் சுதந்திர திட்டம் என்பது ஒரு முட்டுக்கட்டை ," என குற்றம் சாட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதலுக்குப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 115 டொலரைக் கடந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.


