கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் கேம்பிரிட்ஜ் பகுதியில் உள்ள 'L.A. Frank’s' என்ற புகழ்பெற்ற திறந்தவெளி உணவகத்தில், கடந்த வார இறுதியில் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் திருடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்த உரிமையாளர் ரஸ் தாமஸ், கடையின் சேமிப்புக் கிடங்கு கதவு மின்சாரக் கருவி (Grinder) கொண்டு அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுமார் 34 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உணவகத்தில் புகுந்த மர்ம நபர்கள், தலா 11.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 25 முதல் 30 ஐஸ்கிரீம் டப்பாவையும், அதனுடன் தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட மொத்த ஐஸ்கிரீமின் அளவு 300 லிட்டரைத் தாண்டும் என்பதால், இது ஒரு தனிநபரின் தேவைக்காக இருக்க முடியாது என்றும், லாபத்திற்காக மீண்டும் எங்காவது விற்கப்படலாம் என்றும் தாமஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் உணவகத்திற்கு சுமார் 2,000 டாலர்களுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த உரிமையாளர், ஒரு சிறு வணிகமாக இவ்வளவு பெரிய இழப்பைச் சகித்துக் கொள்வது தனது குடும்பத்தைப் பாதிக்கும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு காலை 6 மணிக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் என்றும், கனமான பொருட்களை எடுத்துச் செல்ல கொள்ளையர்கள் நிச்சயம் வாகனத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
கடை அமைந்துள்ள மாநகராட்சி கட்டிடத்தில் கடந்த ஆண்டு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்ட போதிலும், "உறுதியுடன் முன்னோக்கிச் செல்வோம்" என்று கூறியுள்ள தாமஸ், கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


