TamilsGuide

எண்ணெய் வர்த்தகத்தில் பதற்றம் - அமெரிக்காவுக்கு சீனா நேரடி சவால்

ஈரானிடம் எண்ணெய் வாங்கியதற்காக ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்கு சீனா இணங்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாக சீனா உள்ளது. ஈரானிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் "டீபாட்" எனப்படும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஈரானுடைய வருவாயைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா அதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தடைகளை அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் இணங்கவும் மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

"சீன நிறுவனங்கள் 3-ஆம் நிலை நாடுகளுடன் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அது சார்ந்த இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடை செய்யவும் கட்டுப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் முயல்கின்றன. மேலும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் அடிப்படை நெறிமுறைகளையும் இவை மீறுகின்றன.

ஐ.நா. சபையின் அங்கீகாரம் மற்றும் சர்வதேசச் சட்டங்களில் குறிப்பிடப்படாத ஒருதலைப்பட்சமானத் தடைகளை சீன அரசு தொடர்ந்து எதிர்த்து வருகின்றது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்கள், சீனாவின் பிற பகுதிகளில் அமைந்துள்ள இரு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாத இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா செல்கிறார்.
 

Leave a comment

Comment