தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று (2) மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த பிக்குகள் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்தபோது, 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமிதானந்த என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை ஒழுங்குப்படுத்தியுள்ளமை தெரியவந்தது.
இதற்கமைய, கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
அவர் நாளை (3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பிக்குவின் வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருட்கள் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது உதவியாளர் ஒருவரும் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


