'ஜேர்மனி சர்வதேச தமிழ் விருது விழாவில் கனடிய பன்முகக் கலைஞர் ரவி அச்சுதனுக்கு வழங்கப்பெற்ற சிறப்புக் கெளரவம்
அண்மையில் நடைபெற்ற 'ஜேர்மனி சர்வதேச தமிழ் விருது விழா' சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. மேற்படி விழாவை ஜேர்மனி தமிழ் எம்ரிவி தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இவ்வருடத்தின் சிறப்பு நிகழ்வாக தமிழ் எம் ரிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் 34 வது ஆண்டு விழாவும் அன்றைய தினம் கொண்டாடப்பெற்றது. இந்த விருது விழாவில் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள் மத்தியிலிருந்து கலை, இலக்கியம் மற்றும் ஊடகப் பணி ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற 20 மேற்பட்ட கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று விழாவில் கௌரவிக்கப்பெற்றனர்.
மேற்படி விழாவிலேயே கனடிய பன்முகக் கலைஞர் ரவி அச்சுதன் அவர்களுக்கு சிறப்புக் கெளரவம் வழங்கப்பெற்றது
இதில் யேர்மனியில் முன்னணி கலைஞர்கள் நடன ஆசிரியர் கலாநிதி சாவித்திரி அவர்கள் மற்றும் மதுரக்குரலோன் கண்ணன் அவர்கள் மேலும் பின்லாந்து, சுவிஸ், லண்டன், டென்மார்க், வாழ் கலைஞர்கள் கௌரவிக்கப்பெற்றது நிகழ்வின் சிறப்பாகும்.
வாழும் போதே கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் சிறந்த பண்பை தனிமனிதனாக தன் குடும்பத்துடன் இணைந்து கலாநிதி சிவநேசன் அவர்கள் செய்திருப்பது நாம் அனைவரும் வாழ்த்த வேண்டிய விடயம் என விருதினைப் பெற்ற பின்னர் மேடையில் உரையாற்றிய ரவி அச்சுதன் அவர்கள் தெரிவித்தார்.
இவிழாவை சிறப்பாக நடத்திய கவிஞரும். எழுத்தாளரும். சமூகச்செயற்பாட்டாளருமான கலாநிதி சிவநேசன் அவர்கள் சிவநெறிப் பாடசாலையின் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு காணப்பெறும் படங்களில் ரவி அச்சுதன் அவர்கள் தனக்கு வழங்கப்பெற்ற கௌரவத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றுவதையும் மேடையில் அவரது துணைவியார் ஜெயா ரம்யா ரவிஅச்சுதன் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட சிலர் நிற்பதைக் காணலாம்.






















