உரிய விளக்கம் அளிக்கத் தவறினால் நீதிமன்றம் ஊடாக வீட்டை முடக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கொழும்பு, டொரிங்டன் வீட்டை கொள்வனவு செய்வதற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட்டது என்பது குறித்து உடனடியாக விளக்கமளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
'சிரிலிய' கணக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, இந்தச் சொத்து சட்டவிரோதப் பணத்தில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதன் விற்பனை மற்றும் உரிமை மாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உரிய விளக்கம் அளிக்கத் தவறினால் நீதிமன்றம் ஊடாக வீட்டை முடக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த சொத்து விபர அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்குள் முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அவருக்குக் காலக்கெடு விதித்துள்ளது.
இதனைத் தவறவிடும் பட்சத்தில், தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.























