TamilsGuide

அமெரிக்கக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல் - 22 பேர் தடுத்து வைப்பு

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமன் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமன் வளைகுடாவில் கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி, ஈரானின் கொடியுடன் பயணித்த 'தூஸ்கா' என்ற கொள்கலன் கப்பலை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் சிறைபிடித்தது. கப்பலில் மொத்தம் 28 ஈரானிய மாலுமிகள் இருந்தனர்.

அவர்களில் 06 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 22 பேரையும் விடுவிக்க ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள ஆரம்பித்ததைத் தொடர்ந்து பதிலடியாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது.

பின்னர் பாகிஸ்தான் முயற்சியால் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ஈரானிடமிருந்து புதிய யோசனைகள் வரும் வரை, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 13 ஆம் திகதி முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானியக் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா கடும் கடல்வழி முற்றுகையை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment