2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடாவில், இந்த வார இறுதியில் கால் பந்து சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உறுப்பினர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கனடா குடிவரவு முகமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள் கனடாவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வான்கூவர் நகரில் நடைபெறும் உலக கால்பந்து சம்மேளன மாநாட்டில் பங்கேற்பதற்காக விசாவுடன் சென்றிருந்த ஈரானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் மற்றும் பிரதி பொதுச்செயலாளர் உள்ளிட்ட மூவர், டொரொண்டோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் 'தகாத நடத்தையை' காரணம் காட்டி உடனடியாக நாடு திரும்பியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள கனடா குடிவரவு முகமையகம், ஈரானின் 'இஸ்லாமிய புரட்சிகர காவற்படை' உறுப்பினர்களுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானிய இராணுவத்தின் மிகவும் கௌரவமான ஒரு அங்கத்தை , கனேடிய குடிவரவு அதிகாரிகள் அவமதித்ததாக ஈரானின் 'தஸ்நிம்' செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, ஈரானிய புரட்சிக்கர காவல்படையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் கனடாவுக்குள் நுழைவதை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே தடை செய்திருந்தது.
அதேவேளை முன்னதாக, ஈரானின் குறித்த கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட்ட விதம் குறித்து கனடாவிற்குள் விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடிவரவு அதிகாரிகள் விமான நிலையத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.


