TamilsGuide

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்

இந்தியாவில் இலங்கை மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,

இந்தச் செயல் மனித உரிமைகளின் கடுமையான மீறல் என்பதுட், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் இந்த சம்பவம் பெருமளவில் சீர்குலைக்கிறது.

பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வது எந்தவொரு நாட்டின் அடிப்படைப் பொறுப்பு.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இந்திய மீனவர்கள் நீண்ட காலமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதிலும், இலங்கை மீனவர்கள் பெரும்பாலும் அவர்களை சகோதரத்துவ உணர்வுடன் அணுகி அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகள் இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதற்கு வழிவகுத்து, நாட்டின் கடல் சூழலுக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டுத் திட்டமும் வலுவான ஒத்துழைப்பும் தேவை.

எனவே, தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தவும், அதற்குக் காரணமானவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் – என்றார்.
 

Leave a comment

Comment