அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான (FBI) இன் முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி (James Comey) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோமி பகிர்ந்த புகைப்படம் ஒன்றில், கடற்கரை மணலில் கடல் சிப்பிகளைக் கொண்டு "86 47" என்ற எண்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க வழக்கில் "86" என்பது ஒருவரை நீக்குவது அல்லது அகற்றுவதைக் குறிக்கும். "47" என்பது அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த எண்கள் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றுவது அல்லது அவருக்குத் தீங்கு விளைவிப்பதற்கான மறைமுக மிரட்டல் என்று ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
எனினும்,கடற்கரையில் நடந்தபோது தற்செயலாகக் கண்ட அந்த எண்களை ஒரு அரசியல் செய்தியாகக் கருதியே தான் பகிர்ந்ததாக கோமி தெரிவித்துள்ளார்.
"அந்த எண்களுக்கு வன்முறையுடன் தொடர்பு இருக்கிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். வன்முறையை நான் எப்போதும் எதிர்ப்பவன்" என்று கூறி, பின்னர் அவர் அந்தப் பதிவை அவர் நீக்கினார்.
கோமி மீது நீதித்துறை தொடுக்கும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக, காங்கிரஸில் பொய் சாட்சியம் அளித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ஒரு கூட்டாட்சி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.
இந்தப் புகைப்படம் தொடர்பாக கடந்த மே மாதம் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் கோமியிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கோமிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது, ரஷ்யத் தலையீடு குறித்த விசாரணையை முன்னெடுத்ததற்காக கோமி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜேம்ஸ் கோமியின் மகளும் முன்னாள் கூட்டாட்சி சட்டத்தரணியுமான மௌரீன் கோமி, தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


